உலக சினிமா: சோட்ஸி *
யுகன்
அன்பிற்கு ஏங்கும் மனம்
சோட்ஸி என்னும் இளைஞன் ஒரு கேங்க் லீடர். நான்கு பேர் கொண்டது அவன் குழு. ஒரு நாள் ரயில் பயணி ஒருவரிடம் கத்தியைக் காட்டிப் பணம் தருமாறு மிரட்டுகிறார்கள். பயணி பணம் கொடுக்க மறுக்க குழுவில் ஒருவன் அவரைக் கத்தியால் குத்திவிடுகிறான். பயணி இறந்துவிடுகிறார். பணத்தை எடுத்துக்கொண்டு இந்தக் கும்பல் இறங்கிவிடுகிறது.
குழுவில் டீச்சர் பாய் என்றழைக்கப்படுபவன் அச்சம்பவம் குறித்து சோட்சியைக் கடுமையாகப் பேசுகிறான். கோபம் கொண்ட சோட்சி அவனைப் பலமாக அடிக்கிறான். பின் கோபத்துடன் வெளியேறுகிறான்.
அப்போது ஒரு பெண் காரை நிறுத்திவிட்டு கேட் கதவைத் திறக்கப் போன வேளையில் சட்டெனப் போய் காரை எடுக்கிறான். குறுக்கிட்ட அந்தப் பெண்மணியைச் சுட்டுவிட்டுக் காரில் விரைகிறான். காரில் போய்க் கொண்டிருக்கும்போது குழந்தை அழுகுரல் கேட்கிறது. அதன் பின்தான் காருடன் கைக்குழந்தையையும் கடத்திவிட்டோம் என்பதை உணர்கிறான். தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு காரை ரோட்டில் விட்டுவிட்டுக் கிளம்ப முயல்கிறான். குழந்தையின் வீறிட்ட அழு குரல் அவனைத் தடுக்கிறது.
சிறு வயதில் நோயில் படுத்த படுக்கையாய் இருந்த தாய், தந்தையின் அன்பற்ற நட்த்தை இவற்றால் வீட்டை விட்டு வெளியேறித் தெருவில் வளந்ததை நினைத்துப்பார்க்கிறான். அது போன்ற நிலை குழந்தைக்கு வரக் கூடாதென்று நினைத்துக் குழந்தையைத் தூக்கிச் செல்கிறான்.
ஆனால் அவனால் குழந்தையைச் சரியாக வளர்க்க முடியவில்லை. அதே தெருவில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வாழ்பவள் மரியம். அவள் வீடு தேடிச் சென்று துப்பாக்கி முனையில் பால் கொடுக்கச் செய்கிறான்.
இன்னொரு முறை போகும்போது குழந்தை இங்கேயே இருக்கட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறாள். குழந்தையை மரியம் கொஞ்சும்போது தனக்கு இது போன்ற தாய்ப்பாசம் கிடைக்கவில்லையே என ஏங்குகிறான். கிளம்பும்போது இது என் குழந்தை ஜாக்கிரதை என்கிறான்.
குழந்தை அவனிடம் வந்த கொஞ்ச நாட்களில் அவன் வாழ்க்கை முறையே மாறிவிடுகிறது.
தன் குழுவில் இருக்கும் டீச்சர் பாயைத் தொடர்ந்து படிக்கவைப்பதற்காகப் பணம் திருடலாம் என முடிவெடுக்கின்றனர். குழந்தையின் வீட்டுக்குப் போகிறார்கள். குழந்தையின் அப்பாவைக் கட்டிப்போட்டிவிட்டு ஆளுக்கொரு திசையில் போகின்றனர்.
ஒரு அறைக்குள் நுழைந்த சோட்சி அங்கே நூற்றுக்கணக்கான பொம்மைகளைக் கண்டு அக்குழந்தை எவ்வளவு வசதியுடன் வாழ்ந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்கிறான். குழந்தையாக மாறி நெடுநேரம் அந்த அறையை ரசித்தபடி இருக்கிறான்.
பின் பணத்தைக் கொள்ளையடிக்காமல் குழந்தைக்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொள்கிறான்.
கட்டிப் போடப்பட்டிருக்கும் குழந்தையின் அப்பா அலாரத்தை அழுத்துகிறார். கோபமடைந்த சோட்ஸியின் நண்பன் அவரைச் சுடப்போகிறான். அதற்குள் சோட்ஸி நண்பனைச் சுட்டு வீழ்த்துகிறான் குழந்தையின் தந்தை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க அங்கிருந்து தப்புகிறான்.
அன்று இரவு மரியம் வீட்டிற்கு வருகிறான். குழந்தை விஷயம் எனக்குத் தெரியும் நியூஸ் பேப்பரில் பார்த்தேன் என்கிறாள். அக்குழந்தையைத் ஒப்படைத்துவிடு என்கிறாள். குழந்தையை ஒப்படைத்த பிறகும் நான் வீட்டுக்கு வரலாமா என்கிறான். மௌனமாகத் தலையசைக்கிறாள்.
குழந்தையை ஒப்படைக்கப் போகிறான். வாசலில் வைத்துவிட்டுப் போக மனமில்லாமல் பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டுப் போகலாம் என்று காத்திருக்கும் அந்தச் சிறிய இடைவேளையில் அங்கே வந்த போலிசார் அவனைச் சுற்றி வளைக்கின்றனர். குழந்தையைக் கண்ணீர் மல்க ஒப்படைத்துவிட்டுச் சரணடைகிறான்.
தான் இழந்துவிட்ட இனிய குழந்தைப் பருவத்தை அந்தக் குழந்தையும் இழந்துவிடக் கூடாதென்ற் நினைக்கிறான் சோட்சி. அன்பிற்கு ஏங்கும் அவனது மனம் காட்சிகளால் உணர்த்தப்படும் விதமே இப்படத்தை உயர்வான இடத்திற்கு இட்டுச் செல்கிறது. படத்தின் அற்புதமான பின்னணி இசை வியப்பூட்டுகிறது.
2005இல் வெளிவந்த இந்த்த் தென்னாப்பிரிக்கப் படத்தின் இயக்குநர் கெவின் ஹீட். சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற படம் இது.
*